கடந்த மூன்று வாரங்களாக சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி சனிதோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் நகல்தான்.
கலக்கப்போவதுவில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் அசத்தப்போவதில் இருக்கிறார்கள். இரண்டு நிகழ்ச்சிகளின் இயக்குனரும் ஒருவரே என ஊடகங்களின் வழி அறிந்தேன்.
நிகழ்ச்சி நன்றாகவே இருக்கிறது. எல்லா கலைஞர்களும் அசத்துவதற்க்கு முன்பு சன் தொலைக்காட்சியை புகழ்வதும் விஜய் தொலைக்காட்சியை இகழ்வதும் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.
இவர்களுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை. ஆனால் இந்த கலைஞர்கள் இன்று பிரபலமாக இருப்பதற்கு விஜய் ஒரு முக்கியமான காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இருளில் இருந்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது விஜய்தான்.
விஜய்யை விட சன் மிகவும் பிரபலமானதுதான். நிகழ்ச்சி அதிக தேசங்களை சென்றடையலாம். அதிக சம்பளமும் கிடைக்கலாம். அதற்காக ஏற்றி விட்ட ஏணியை பழித்துப் பேசுவது உகந்ததாக இல்லை. சன் நிர்வாகம் இதை ரசிப்பதாகவே தெரிகிறது. சில மாதங்களாக புதுமையான நிகழ்ச்சிகளாலும் சிந்தனைகளாலும் விஜய்யின் பெயர் பிரபலமாவது சன்னுக்கு எரிச்சலை அளித்திருக்கக் கூடும். ஆனால் போட்டி நிறுவனத்தை இப்படி ஒரு நிகழ்ச்சி மூலம் இகழ்வதை எத்தனை நேயர்கள் விரும்பி ரசிப்பார்கள் என தெரியவில்லை.
சன் தொலைக்காட்சிக்கு இது கண்டிப்பாக ஒரு கரும்புள்ளிதான்!